புதன், 15 ஜூலை, 2009

நிரல்

நிரல்
எத்திசையில் பயணித்தாலும்
நினைவுகளில் நீ
புத்திபேதலித்து
ரீங்காரமிடுகிறாய்....
என்
நிலைமைகள்
சொல்லத்தவிக்கும்
கிழமைகளாய் உன்னைச்
சுற்றிச்சுற்றி வருகின்றன..
உறங்கினாலும் விழித்தாலும்
உன்னைத் தரிசிக்கிறது மனம்..
கிறங்கிப்போய்த் தவிக்கிறது
தினம்...
கிட்ட வந்து
கிள்ளினாலும்
எட்ட நின்று
முட்டிப்பார்க்கிறது உன்
சிந்தனை....

தெருவில் விளையாடும்
பிஞ்சுகளைக் காண்கிறேன்..
நீ என்
நெஞ்சினில் விளையாடுகிறாயென
அஞ்சுகிறது மனம்....

கணநேரப் பணியிலும்
ஆசையாய் உனை
இணைத்து
அசைபோடுகிறது மனது...

ஒவ்வொரு
செயல்பாடுகளின்போதும்
என் எண்ணம்
ஒருமுறை உன்னைப்
பரிசீலித்துக்கொள்கிறது
உன்னிடம்
பரீட்சித்துக்கொள்கிறது

என்னுள்
கோப்பு, வரலாறு, கருவியீடு
தேடல், வெட்டல்
ஒட்டல், நகலெடுத்தல்,
அமைப்புகள், செயல்பாடுகள் என
எந்தச் செயல்களுக்கும்
உன் 'உதவி'யையே
நாடுகிறது சிந்தனை....
சிலசமயம்
கட்டுக்கடங்காமல்
சுற்றித்திரிகிறது
எண்ணப்பள்ளங்கள்...
தொடர்ச்சியாக
மீள்பதிப்பு செய்யப்படுகிறாய்...
என் நினைவில்
மீளாப்பதிவாக வெல்கிறாய்...

கோப்புகள் பலவற்றைத்
திறக்கவியலாதவையாக்கி
துவம்சம் செய்கிறாய்...
பிடித்திருக்கிறது உன்
சிறுமித்தனமான இந்த
சிந்தனை...

சில கோப்புகளுக்குள்
உன்னை நுழைத்து
என்னைப்
பைத்தியம் பிடிக்கவைக்கிறாய்...

ஆழ்பட்டுப்போன ஆசைகளுடன்
பாழ்பட்ட கனவுகளுடன்
சம்பந்தமற்று உன்னைச்
சாளரத்தில் இருத்துகிறேன்...
நீயோ திடீரென
தாளறங்கள் பார்க்காமல்
சாளரத்தை மூடிச்
சிந்தனையைச் சிதைக்கிறாய்...

ஒவ்வொருமுறையும்
புதிய பரிமாற்றத்துக்குமுன்
உன்வீட்டுக் கதவைத்
தட்டிப்பார்க்கிறது மனம்

திடீர்திடீரென
துடைக்கப்படுகிறது
கனவுகள்...
துண்டிக்கப்படுகிறது
சிந்தனை...

என் செயல்பாடுகளில்
ஒவ்வொரு மூலைகளிலும்
நந்தியாய் அமர்ந்து
சந்திசிரிக்கவைக்கிறாய்...

என்
நிகழ்ச்சிகளுக்குள்
என்னை அறியாமல்
இணைக்கப்பட்ட
வைரஸ் நிரல் நீ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக